திருக்கோவில் பிரதேச அம்மனாலயங்களின் சடங்கு பற்றிய கூட்டத்தில் சில தீர்மானங்கள்

(காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கின் இறுதிநாள் அதிகாலை திருக்குளிர்ச்சி பாடும் நிகழ்விற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறானதொரு தீர்மானம் திருக்கோவில் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 8ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 7ஆம் திகதி அம்பாள் ஊர்வலம் இடம்பெறும்.

அதுதொடர்பாக சமகால கொரோனா நெருக்கடியை மையமாக வைத்து பிரதேசமட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்மன் ஆலயங்களின் வருடாந்த திருக்கதவு திறப்பதும் மற்றும் பூஜை சடங்கு நிகழ்வுகளும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரணசூழ்நிலையில் எவ்வாறு நடாத்துவது என்பது பற்றிய கலந்துரையாடலும்கூட்டமும் நேற்றுமுன்தினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்கழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் டபிள்யு.ஈ.கமலராஜன் உதவிப்பிரதேச செயலாளர் கந்தவனம் சதிஷ்கரன் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோத்தர் கே.சர்மிளா சிரேஷ்ட கிராம சேவை உத்தியோத்தர் கண.இராஜரெத்தினம் மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் கிராம சேவை நிர்வாக உத்தியோத்தர் திருமதி பரிமளவாணி திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ..மசூத் திருக்கோவில்பொலிஸ்நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி எம்.எ. மஜீத் திருக்கோவில் சுகாதார பணிமனையின் சிரேஸ்ட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதாகரன் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

  • ஆலயக்கிரியைகள் சடங்குகள் யாவும் வழமைபோல் நடாத்தலாம். ஆனால் அனைத்தும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெறல்வேண்டும்.
  • ஆலயத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் கைகழுவி மாஸ்க் அணிந்து சமுக இடைவெளியை பேணவேண்டும்.
  • சடங்கு இடம்பெறும் ஏழுநாள் தினப்பூஜைக்கு ஆலய நிருவாகம் உபயகாரர்கள் உள்ளிட்ட 50பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
  • காலை 7மணி முதல் மாலை 4மணிவரை மடைப்பெட்டி கொண்டுவருபவர்கள் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகளுடன் முறைப்படி வந்து நேர்த்திமடையில் ஒப்படைக்கலாம். அதற்கு ரோக்கன் கொடுக்கவும் கலந்துரையாடப்பட்டது.
  • ஆலயத்திற்கு வருவோர் ஆலயத்துள் நீண்டநேரம் தரித்து நிற்க முடியாது. ஒரு 10நிமிட இடைவெளியில் அவர்கள் வெளியேற வேண்டும். ஏனையவர்களுக்கு இடம் விடும் வகையில் பக்தர்கள் நடந்துகொள்ளவேண்டும்.
  • 7ஆம் திகதி மாலை இடம்பெறும் வழமையான அம்பாள் ஊர்வலம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்ட ஆக 50பேர் ஊர்வலத்தில் பங்கேற்கமுடியும். காவடிக்கு வாய்ப்பில்லை. ஊரடங்கு நேரமெனின் ஏஎஸ்.பி. அனுமதி பெறப்படவேண்டும். மக்கள் தேரின்பின்னால் செல்வதைத்தவிர்த்து வீட்டு வாயலில் நின்று அம்பாளை தரிசிக்கலாம்.
  • அங்கப்பிரதட்சணம் கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திகள் செய்யலாம். அதற்கு சுகாதாரப்பகுதியினரின் தடையில்லை.ஆனால் அதனூடாக தொற்றுக்கு இடமளிக்க முடியாது. முடிந்தளவு அடுத்தவருடம் செய்ய முயற்சிப்பது நல்லது என ஆலோசனை கூறுவது பொருத்தமாகும்.
  • வழமையாக 1500 பானைகள் பொங்கி வைகாசிப் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இம்முறை சமுக இடைவெளி பேணியவாறு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும்.
  • பொதுவாக ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மாஸ்க் பெற்றுதர நடவடிக்கை எடுப்பதாக வைத்தியஅத்தியட்சகர் தெரிவித்தார்.
  • மேலும் சடங்கு இடம்பெறும் நாட்களில் ஆலயமுன்றலில் முடியுமானவரை டிஜிட்டல் உடல்வெப்பமானி கொண்டு சோதிப்பதற்கும் ஆலயப்பணியிலீடுபடுபவர்களுக்கு கையுறைகளை வழங்கவும் ஏற்பாடு செய்வதாக சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் சுதாகரன் கூறினார்.
  • ஏனைய சகலகலை அம்மனாலயம் முத்துமாரியம்மன் ஆலயம் மங்கை மாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்களும் இதே நடைமுறையை பின்பற்றி அவர்களது சடங்குகளையும் தீர்த்த நிகழ்வுகளையும் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டது.