சிதைவுறப்போகும் வாக்குகளும் அழிவுறப்போகும் அம்பாறை தமிழர்களும் - இரா.சயனொளிபவன்


சிதைவுறப்போகும் வாக்குகளும் அழிவுறப்போகும் அம்பாறை தமிழர்களும் 

கட்சி பேதங்கள் , தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்திலுள்ள  தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியே ஆக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தின் நாம் இன்று பயணிக்கின்றோம். அம்பாறை மாவட்டத்திலே அண்ணளவாக 150000 தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். கடந்த கால கணிப்பீட்டின் பிரகாரம் அண்ணளவாக 94000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக காணப்படுகின்றனர்.



குறிப்பிடப்பட்ட  மொத்த வாக்குகளையும் ஒரே நேர் கோட்டுப்பார்வையில் சிந்தித்து வாக்களிப்போமானால் குறைந்த பட்சம் இரண்டு ஆசனங்களை அம்பாறை தமிழர்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த அணுகுமுறை கலச்சாத்தியமற்ற ஒன்றாகும்.  குறிப்பிடப்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பல தேசிய கட்சிகள் , தமிழ் தேசிய கட்சிகள், பல சுயேட்சை குழுக்களும் இத்தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளனர்.

இச்செயற்பாடானது நிச்சயமாக தமிழர்களின் வாக்குகளை சிதைவுறச் செய்து தமிழினத்தை அரசியல் அநாதையாக்கும் ஒரு திட்டவட்டமான ஒரு செயற்பாடாகும். தற்காலத்தில் களம்புகுத்தப்பட்டுள்ள பல கட்சிகளும் அதனுடைய  எண்ணிலடங்கா வேட்பாளர்களும் நிச்சயமாக ஒட்டுமொத்த தமிழின வாக்குகளையும் சிதைவடைய வைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கப்போகின்றார்கள்  என்பதில் எந்தவிதமான ஐய்யப்பாடுகளுமில்லை.

பெரும்பான்மை வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை அம்பாறை மாவட்டத்தின்  பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் பல ஒட்டுக்குழுக்களையும் தேசிய கட்சி பொம்மை வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளனர். இதனை நாம் நன்கு உணராவிடின் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி வலையிலே சிக்கி அரசியல் அநாதையாகிவிடுவது மாத்திரமன்றி பிற சமூகத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு புறந்தள்ளப்படுவோம்.

ஆகவே, இது காலத்தின் கட்டாயம்;  நாம் அனைவரும் ஒருமித்து தமிழ் தேசிய கட்சியை பலப்படுத்தி வாக்களிப்பதன் மூலம் எமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பை அழிக்க என்னும்  அந்நிய சக்திகளுக்கெதிராக முன்னோக்கிச் செல்லலாம். இந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து சற்றும் தளர்வடைவோமானால் சகோதர இனத்தவர்களான முஸ்லிம்கள் அரசியல் ஆசனத்தை தட்டிச் சென்று எம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் பின்னோக்கி இருக்கும் நாம் அரசியலிலும் அநாதையாகி சகோதர இனத்தவர்களின் அடக்குமுறை வலயத்திற்குள் நிச்சயமாக அகப்படுவோம்.

கடந்த பொதுத்தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பானது 45421 வாக்குகளை பெற்றுக்கொண்டது. இத்தேர்தலிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33102 வாக்குகளை பெற்றது ஆகவே வெறுமனே 12219 வாக்குகள் வித்தியாசத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஒரு ஆசனத்தை தட்டிச் சென்றது ஆனால் இத்   தேர்தலிலே சகோதர இனத்தவர்களான முஸ்லிம்களின் பிறப்பு விகிதாசார அதிகரிப்பையும் எமது இனத்தின் பிறப்பு விகிதாசார வீழ்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கும் போது ஒரு ஆசனத்தை தமிழர்கள் பெற்று கொள்வதற்காக பாரிய சவால் ஒன்றினை எதிர் கொள்ள வேண்டி நிலை இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் பல கட்சிகளிடையே தமிழ் வாக்குகள்  சிதைவுறுமானால் நிச்சயமாக இது சகோதர இனத்தவரான முஸ்லிம்களுக்கு பாரிய அனுகூலத்தை ஈட்டிக்கொடுக்கும். எனவே அன்பார்ந்த தமிழ் வாக்காளப் பெருமக்களே நாம் அனைவரும் கட்சி பேதங்கள், தனிப்பட்ட குரோதங்கள் என்பனவற்றை களைபிடுங்கி தமிழர்களாக ஒன்று படவேண்டிய தருணம் இது. எமக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை  தக்க வைக்கவேண்டுமேயானால், அந்நிய கட்சிகளையும், ஒட்டு குழுக்களையும் அதனுடைய வேட்பாளர்களையும் வாக்கினாலே அடித்து விரட்ட வேண்டிய சரியான  தருணம் இதுவேயாகும்.

மாற்றத்தை எதிர்நோக்கும் அனைவரும் 
விடியலைத் தேடிய இளையவர் பயணத்துடன் இணைந்திருங்கள்.

இரா. சயனொளிபவன்,
திகாமடுல்ல ( அம்பாறை )  மாவட்ட வேட்பாளர் 
தமிழ் தேசிய கூட்டமைப்பு.