பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக கொடுகடன்- வட்டி உதவுதொகைத் திட்டம்

இலங்கை மத்திய வங்கியானது கொவிட்- 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 யூன் 26ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன் வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கின்றது.

இந்த திட்டமானது, 2020 ஜூலை 01ம் திகதி அன்று தொடங்கி வைக்கப்படவிருப்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 பில்லியன் வரையறையினுள், சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணய விதிச்சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச் சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணையாக செயற்படும்.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது சிறியளவிலான கடன்களுக்காக 80 சதவீதத்திலிருந்து ஒப்பீட்டளவில் பாரிய அளவிலான கடன்களுக்கு 50 சதவீதம் என்கின்ற வீச்சில் வங்கிகளுக்கு கொடுகடன் உத்தரவாதத்தினை வழங்குமென்பதுடன், பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் தொழிற்பாட்டு மூலதன தேவைப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு கடன்களை வழங்க வங்கிகளை இயலச்செய்யும்.

இலங்கை மத்திய வங்கியானது கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்த சதவீதத்தினை உள்ளீர்ப்பதனால், பிணைகளை காட்டிலும் அத்தகைய வியாபாரங்களின் நிச்சயத்தன்மை மற்றும் நிதிப்பாய்ச்சல் என்பவற்றை கவனத்திற்கொண்டு எளிதில் பாதிப்படையக்கூடிய வியாபாரங்களுக்கு வங்கிகள் அவர்களது கடன்வழங்கலை விஸ்தரித்துக்கொள்ளமுடியும்.

வங்கிகள் வியாபாரங்களுக்கு 4 சதவீதத்தில் கடன்களை வழங்குவதற்கு தங்களுடைய சொந்த நிதியை, குறிப்பாக நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 300 அடிப்படை புள்ளிகளினால் குறைக்கப்பட்ட நியதி ஒதுக்கு விகிதத்தினூடாக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட ஏறத்தாழ ரூ. 180 பில்லியன் மேலதிக திரவத்தன்மையினை பயன்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளின் நிதியியல் செலவுகளை பூர்த்தி செய்வதற்கு 5 சதவீதத்திலான வட்டி உதவுதொகையினை வழங்கும். இந்த திட்டத்தின் செயற்பாட்டு அறிவுறுத்தல்கள் விரைவாக உரிய நேரத்திற்கு வங்கிகளுக்கு வெளியிடப்படும்.