பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (2020.06.30) காலை கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் வழிபாடுகள் நடைபெற்றன. இதனையடுத்து, பிரதமரினால் புதிய வானொலி நிலைய வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் 13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட மத நிகழ்வுகள் சம்போதி விகாரையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்போதி விகாரையில் புனித தந்தத்தை வழிபட்டு ஆசி பெற்றுக் கொண்ட பிரதமர், திறக்கப்பட்ட வானொலி நிலையத்தில் வைத்து முதல் முறையாக நேர்காணல் வழங்கினார். அங்கு குறுகிய நேரம் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தூய பௌத்தத்தை பரப்புவதற்காக பௌத்தயா தொலைக்காட்சியின் நிறுவனர் தரனாகம குஸலதம்ம நாயக்க தேரர் மேற்கொண்ட சேவைகளை நினைவு கூர்ந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், பௌதயா தொலைக்காட்சி மற்றும் வானொலியின் பணிப்பாளர் பொரலந்தே வஜிரஞான தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா,வைத்தியர் ஹர்ஷ அலஸ் உட்பட குழுவினர் கலந்துக்கொண்டனர்.