இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் படுகாயம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று(15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பொகவந்தலாவையிலிருந்து ஹற்றன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்தும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.