மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு கடூழிய சிறை


மாணவனை கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் 12 வயது சிறுவனை அதிபர் கொடூரமாக தாக்கியதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடொன்று வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு கொழும்பைச் சேர்ந்த 52 வயதான சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் அதிபருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூபா 25 ஆயிரம் வழங்குமாறும் அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.