வாகனத்தை நிறுத்த முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று(15) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று இரவு வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி வீதியால் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை நிறுத்தும்படி சைகை காண்பித்தார். உழவு இயந்திரம் நிறுத்த முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான 42 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார். விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இவரது சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.