தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இருவர் கைது


உயிர்த்த ஞாயிறுத் தினமான இன்று (04) கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், தேவாலயங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

​களுத்துறை-ஹொரணை கல் எதடுகொட சென். பொரஸ்ட் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இவ்விருவரும், தேவாலயத்துக்குள் நுழையும் வீதியின் ஊடாக செல்வதற்கு முயன்றுள்ளனர். இதன்போதே, அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேகத்தின் போரில் இருவரை கைது செய்துள்ளனர்.

அந்த தேவாலயத்தின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன, எனினும், அவ்விருவரிடமும் தேசிய அடையாள அட்டை இல்லையெனவும், மன்னார் மற்றும் ஹட்டன்-டிக்கோயாவைச் சேர்ந்த, 31 மற்றும் 61 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.