கிழக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்:09 மரணங்கள். 25ஆயிரத்தை தாண்டியது தொற்று:432 மரணம் என்கிறார் மாகாண பணிப்பாளர்.



(வி.ரி.சகாதேவராஜா)

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48 மணிநேரத்தில் 1354தொற்றுகளும் ,09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் 684 தொற்றுக்கள், நேற்றைய தினம் 670 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் .


நேற்றைய தினம் ஏற்பட்ட 670 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 261 தொற்றுக்களும், கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 150தொற்றுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 08 தொற்றுக்கள் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 251தொற்றுக்களும் , ஏற்பட்டுள்ளன.

அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 62தொற்றுக்கள், தெஹியத்தகண்டியவிலும் 56 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 15தொற்றுக்கள் நிந்தவூர்ப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

கிழக்குமாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 25ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 25570தொற்றுகளும் , 432மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 26ஆயிரத்து 434தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.,

கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்.