இலங்கைக்கு தெற்காக வளிமண்டலத் தளம்பல் நிலை



நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.