நாட்டில் சிறுவர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !



நாட்டில் சிறுவர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் முகாமையின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 சிறுவர் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் தொழுநோயாளிகள் அதிகரிப்பதற்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர்கள் அடையாளம் காணப்படாமையே காரணம் எனவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் இருக்கும் சூழ்நிலை காணப்படுவதால், அவர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்காக அனுப்பும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எம்.ஐ.கே. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 13 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.