இலங்கை வரலாறு மாற்றியமைக்கப்பட்ட நிகழ்வின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது.
சுதந்திர இலங்கை என்றுமே எதிர்கொள்ளாத பாரிய பொருளாதார நெருக்கடியை, 2022ம் ஆண்டு இலங்கை எதிர்கொண்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவிழந்தமை, டாலர் கையிருப்பு பாரியளவில் குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளினால் நாட்டில் பொருட்களுக்கான விலை உயர்வு, எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, 10 முதல் 14 மணி நேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு என பல்வேறு பிரச்னைகளை மக்கள் கடந்த ஆண்டு எதிர்கொண்டார்கள்.
ஈஸ்டர் தாக்குதலால் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்த நிலையில், கொரோனா பெருந்தொற்று இலங்கையைத் தாக்கியது.
இதனால் நாடு முழுவதும் முடங்கி, பொருளாதாரம் ஸ்தம்பித்தது.
இலங்கையின் பிரதான வருவாய் ஆதாரமான சுற்றுலாத்துறை பூஜ்ஜியத்தை நோக்கி தள்ளப்பட்டது. ஏற்றுமதி வருமானம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதனால், இலங்கையின் பிரதான வருமான வழிகள் மூடப்பட்டு, இலங்கை பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தை தொட்டது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி பீடத்தில் இருந்த ராஜபக்ஷ குடும்பமே காரணம் என தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி இரவு போராட்டம் வெடித்தது.
இலங்கை ஜனாதிபதியாக அப்போது இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு அமைந்துள்ள நுகேகொடை - மிரிஹான பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தன்னிச்சையாக திடீரென ஒன்று கூடி போராட்டத்தை தொடக்கினார்கள்.
2022 மார்ச் 31ம் தேதி மாலை 6 மணியளவில்...
மிரிஹான பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லும் வழியை திடீரென நூற்றுக்கணக்கானோர் முடக்கி, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாக பரவியது.
இந்த செய்தியை கேள்வியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்பாராத விதத்தில் கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்கு முன்பாக சுமார் 8 மணியளவில் ஒன்று கூடியிருந்தனர்.
வீடுகளில் இருந்தவர்கள், வேலைகளுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் மிரிஹான பகுதியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
எதிர்பாராத விதத்தில் மக்கள் ஒன்று கூடியதை அவதானித்த போலீஸார், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ராணுவம், விசேட அதிரடிப் படை என அனைத்து பாதுகாப்பு பிரிவினரையும் மிரிஹான மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு வரவழைத்திருந்தனர்.
அதேபோன்று, ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைவதற்கு மக்கள் முயற்சித்த தருணத்தில், மக்களை கட்டுப்படுத்த முடியாத போலீஸார் முதலில் நீர்த் தாரை பிரயோகங்களை நடத்தியிருந்தனர்.
நீர்தாரை பிரயோகத்தை எதிர்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்குள் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் போலீஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியிருந்தனர்.
கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் ஆகியவற்றுக்கும் கட்டுப்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம் நடத்த ஆரம்பித்தனர்.
கண்ணீர் புகை பிரயோகம், நீர்தாரை பிரயோகம், தடியடி பிரயோகம் ஆகியவற்றிற்கும் கட்டுப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி பிரயோகமும் நடத்தியிருந்தனர்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதியை மறித்து, பாதுகாப்பு பிரிவின் பேருந்தொன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பேருந்தை அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்து தீக்கிரையாக்கியதுடன், பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான வாகனங்களையும் தாக்கி, சேதமாக்கியிருந்தனர்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பிரிவினர் கொண்டு வந்த வாகனங்கள் பொதுமக்கள் வாகனங்கள் மீதும் மோதுண்ட நிலையில், பொதுமக்களின் வாகனங்களும் சேதமாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில், நுகேகொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உடனே அமலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர், ஆர்ப்பாட்டம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அடுத்த நாளான ஏப்ரல் முதலாம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்காங்கே போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பாரிய தன்னெழுச்சி போராட்டமாக உருவானது.
கொழும்பு காலி முகத்திடலில் ஒன்று கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் மாத்திரமன்றி, அரசாங்கத்தையே பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், சுமார் 100 நாட்களை தாண்டி முன்னெடுக்கப்பட்டு, ஜுலை மாதம் 9ம் தேதி வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரை முற்றுகையிட்டு, ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் செல்லும்படி செய்தனர்.










.jpeg)



.jpeg)