சிறுவர்களின் ஆளுமை வெளிப்படுத்தலாக யாழ்பாணத்தில் அரங்கேறிய மழைப்பழம் சிறுவர் கூத்து - ப.ராஜதிலகன்

இன்றைய காலச்சூழலில் சிறுவர்கள் நவீன கல்வி முறை மூலமாக சூழலில் இருந்து அன்னியப்பட்டு போட்டிமுறைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு அதில் வெற்றி பெற்று கொண்டாடுகின்ற நிலைதான் காணப்படுகின்றது. அவற்றை வலுப்படுத்துகின்ற முறையிலேயே பாடசாலைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் தொடர்பு ஊடகங்களும் செயற்பட்டுகொண்டு வருகின்றன. இதனால் இன்றைய சிறுவர்கள் கூடி விளையாடி சேர்ந்து இயங்கிக் கற்கின்ற சூழ்நிலை இல்லாமல் போய் தனித்தனி மனிதர்களாக வாழ்கின்ற சூழ்நிலையிலேயே அபத்தமான வளர்ச்சியடைந்து காணப்படுகின்றனர்.இந்நிலையானது ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கான செயற்பாடாக அமையாது.

நவீன கல்வி முறையானது சிறுவர்களை சுயசிந்தனையாளர்களாகவும், சுய படைப்பாக்க சிந்தனையாளர்களாகவும் உருவாகுகின்ற நிலை இல்லாமல் போய் தங்கி வாழ்வோர்களாகவே கட்டமைத்து இருகின்றது. அதாவது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதனை கேட்டு பரீட்சைக்கு விடை எழுதுகின்ற மாணவர்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் பல அசௌகரியங்களையும் சவால்களையும் சிறு வயதினில் இருந்தே அனுபவிக்கினறனர். இச் செயற்பாடுகளினால் சுயசார் படைப்பாளிகளின் உருவாக்கம் என்பது மழுங்கடிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான சூழ்நிலைகளையும் பின்னணிகளையும் வைத்துக்கொண்டு இவற்றில் இருந்து விடுபட்டு இன்றைய சவால்களை எதிர்கொண்டு சுயபடைப்பாற்றல் திறன் கொண்ட ஆளுமைகளாக சிறுவர்களை உருவாக்குகின்ற மாற்று கல்வியியல் முறை தேவை என்பது உணரப்;பட்டு இன்று கல்வியியல் அரங்கு ஈழத்தில் பரவலாக்கம் அடைந்திருக்கின்றது. கல்வியல் அரங்க முறை என்பது நவீன கல்வி முறையில் இருந்து விடுபட்டு சிறுவர்கள் பொது வெளி, மரநிழல்கள் கீழ் அழைத்து அவர்களை சூழலுடன் கூட்டுச்சேர்ந்து விளையாடுகின்ற தன்மையும், சிறுவர்கள் பாட்டுப்பாடுதல், கதை கூறுதல், கதை கொண்டு விளையாடுதல், பாரம்பரிய சூழல் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுதல் இதன் மூலமாக சிறுவர்கள் சுய படைப்பாக்கத் திறன் கொண்ட  ஆளுமைகளாகவும், சுய சிந்தனையாளர்களாகவும் ஆளுமையாளர்களாகவும் கல்வியல் அரங்க முறையின் மூலம் பரிணமிக்கின்றனர்.


இப்பின்னணியிலே கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கல்வியல் அரங்க முறைமையையும் பாரம்பரிய அரங்க முறைமையையும் உள்வாங்கிக் கொண்டு சிறுவர்களுக்குரிய வகையில் சிறுவர் கூத்தரங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்கின்ற கருத்தியலை முன்மொழியப்பட்டதோடு அது ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் பரவலாக்கமும், தொடர் செயற்பாடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக கிழக்கு பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் இ.கங்கைகோபாலனின் ஆய்வு செயற்பாடாக 16.09.2015ம் திகதி அன்று யாழ் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் மழைப்பழம் சிறுவர் கூத்து அரங்கேற்றம் கண்டது.

இவ்அரங்கேற்ற நிகழ்வானது சுதுமலை அம்மன் ஆலய பொது வெளியில் பாரம்பரிய முறைப்படி வட்டக்களரி அமைக்கப்பட்டு இவ் வட்டக்களரியிலே கூத்து அரங்கேற்றப்பட்டது. சரியாக பி.ப 6.00 மணி அளவில் நிகழ்ந்த ஆரம்பமானது. முதல் நிகழ்வாக அதிதிகளாக கலந்து சிறப்பித்த பேராசிரியர் தயாசோமசுந்தரம் அவர்களும், நடன விற்பனர் சாந்தினி சிவநேசன் அவர்களும், மிருதங்க வித்துவான் க.கண்ணதாசன் அவர்களும், அண்ணாவியார் ஞானசேகரம் அவர்களும், ஏட்டண்ணாவியார் சிவநாயகம் அவர்களும் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களும், கலாநிதி வ.இன்பமோகன் அவர்களும் பாரம்பரிய முறைப்படி களரியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றி வைத்து களரிக்கு ஒளியூட்டி நிகழ்வை ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு வரவேற்புரையை ஆய்வாளரும் கூத்து முன்னீடுகாரருமான கங்கை கோபாலன் அவர்களினால் நிகழ்த்தபட்டது. அதனைத் தொடர்ந்து நுண்கலைத்துறைத்தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களால் தலைமையுரையும், முதுநிலை விரிவுரையாளர்கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் ஆய்வு தொடர்பான விளக்கவுரையும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ் சிந்மய பாரதி வித்தியாலய அதிபர் அவர்கள் சிறப்புரையும்ஆற்றினர்.அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களால் நன்றியுரையும் இடம்பெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து,

மூன்று மாத கால தொடர் செயற்பாட்டின் மூலமாக அண்ணாவியார் ஞானசேகரம் அவர்கள், ஏட்டு அண்ணாவியாரும் கூத்துப் பிரதி எழுதுபவருமான சிவநாயகம் அவர்கள், ஆய்வாளர் கங்கை கோபாலன் மற்றும் கனிதவதனி ஆகியோர் இணைந்து சிந்மய பாரதி வித்தியாலய மாணவர்களைக் கொண்டு தொடர் செயற்பாட்டின்மூலமாக பழக்கப்பட்ட மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்து களரியை அலங்கரித்தது.

இதன் சிறப்பம்சம் அனைத்து மாணவர்களும் தங்களது விடயங்களை மட்டும் கவனிக்காது அனைவரும் கூட்டு சேர்ந்து, இணைந்து மகிழ்ச்சியாக  கொண்டாடி ஆற்றுகையை நிகழ்தினர் என்பது கவனிப்புக்குரிய விடயமாகவும் விளங்குகின்றது. மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கூத்து பாத்திரங்களை தங்களது கற்பனைக்கும் திறனுக்கும் ஏற்ப வெளிப்படுத்தினர் என்பது அவர்களது ஆளுமையை சுட்டி நிற்கின்றது.

அத்துடன் கூத்து ஆற்றுகை மட்டும் நிகழ்த்தாமல் களரிக்கு வெளியில் இருந்து கூத்தர்கள் பிற்பாட்டு பாடுவதில் கவனம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வெறுமனே ஆற்றுகையாளர்களாக மட்டும் இருக்காமல் அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டு அரங்கேற்ற நிகழ்வை திறமையாக செய்தனர்.

நுண்கலைத்துறை அரங்கேற்ற நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள், கூத்து ஆர்வலர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்றினைந்து அரங்க நிகழிவிற்குரிய வேலைகள் அனைத்தையும் சிறுவர்களுடன் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்அரங்கேற்ற நிகழ்வை பார்ப்பதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணத்தும் உள்ளவர்களும் வருகைத்தந்து சிறுவர்களது ஆற்றுகையை கண்டுகளித்து அவர்களை உற்சாகப்படுத்தியமை என்பது சிறுவர்களது ஆற்றல்களையும், ஆளுமைகளையும் வளர்ப்பதற்கு உந்து சக்தியாக விளங்குகின்றது.

அரங்கேற்றத்தில் அண்ணாவியாராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஞானசேகரம் அவர்களுக்கும். ஏட்டு அண்ணாவியாராக செயற்பட்டுக் கொண்டிருந்த சிவநாயகம் அவர்களுக்கும், திருமதி மகாயோகேஸ்வரி சிவஞானம் அவர்களும் சட்டதரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களும் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். இச்செயற்பாடானது  அண்ணாவிமார்களின் ஆற்றல், திறமைகளை பாராட்டி அளிக்கப்படுகின்ற கௌரவம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர் கூத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் பல ஆளுமையாளர்களாக விளங்கியமையை  ஆற்றுகை மூலம் விளங்கி கொள்ள முடிந்தது. பாடும் திறன்கொண்டவர்களாகவும், ஆடல் திறன் கொண்டவர்களாகவும், தாளம் போடக் கூடியவர்களாகவும், அனைவரிடமும் வாய்விட்டு பேசக்கூடியவர்களாகவும் கற்பனைத்திறனாளர்களாகவும், சேர்ந்து இயங்கும் திறன் கொண்டவர்களாகவும் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை அரங்கேற்ற நிகழ்வின்போது சிறுவர்கள் செயற்பட்ட தன்மையானது எடுத்துக்காட்டி நிற்கின்றன.

இதுவரையிலும் அரக்கன் பாத்திர ஒப்பனை உடையமைப்பானது அரக்கன் என்று சொன்னால் பயங்கரமான தோற்றம், கொடூரமானவன் என்கின்ற மனப்பதிவு எம்மத்தியில் இருக்கின்றது. அதனையே வெளிப்படுத்தும் வகையில் ஒப்பனை, உடையமைப்பை மேற்கொண்டு வந்தோம். ஆனால் மழைப்பழம் சிறுவர் கூத்தில் வருகின்ற அரக்கனை இவ்அரங்கேற்ற நிகழ்வின் போது வழமையாக எம்மத்தியில் அரக்கனை உருவாக்கியிருந்த நிலையினை,பார்வையை மாற்றியமைத்து சாதாரண குணம் உடையனாகவும் மென்மையான தன்மை உடையவனாகயும் ஒப்பனை உடையமைப்பின் மூலம் வடிவமைத்து இருந்தமையானது சிறுவர்கள் மத்தியில் அரக்கன் பற்றி இருக்கின்ற மனப்பதிவினை மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக உள்ளது.

கூத்தர்களின் உடையமைப்பானது அவர்களது குணவியல், உளவியல் பண்புகளை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் சிறுவர்களுக்குரிய வகையில் வடிவமைத்து இருந்தமை என்பதும் முக்கியமாகும். அத்துடன் பெண் பாத்திரங்களுக்கு சேலை கட்டுகின்ற முறையானது ஏனைய கூத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையுடையதாக அமைந்திருந்நது. அதாவது பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் கொசுவம் வைத்து கட்டுகின்ற முறையிலேயே சேலை கட்டுயிருந்தனர். இவ்வாறு கட்டுவதற்கு இவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பெரியவர்களிடமும் ஏனையவர்களிடமும் அம்முறைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டுவந்து அவற்றை ஏனையவர்களிடம் உரையாடி அதன்பின்னரே அரங்கேற்ற நிகழ்விற்கு பாரம்பரிய முறைப்படி சேலை உடுத்தியிருந்தமை ஆகும். இவ்வாறான விடயம் சிறுவர்களுக்கு பண்பாடு, முன்னைய நடைமுறைகள், கடந்தகால விடயங்கள் பற்றிய தேடல்கள் போன்றவற்றையும் அச்சிறுவர்கள் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது.

அன்றைய தினம் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் வரலாறுகளை மீட்டிப்பார்க்கின்ற களமாகவும், சிறுவர் கூத்தரங்கு அரங்கேற்றம் அமைந்திருந்நது. சிறுவர்களின் ஆற்றுகையின் மூலம் பெரியவர்கள் தங்களது ஊர்களில் கூத்து ஆடிய விடயங்கள் கூத்து இடம்பெறும் போது இருக்கின்ற சூழல்கள், பழைய கூத்தர்கள்  உரையாடி பார்ப்பதற்கான களமாகவும் அமைந்தது.

சிறுவர் கூத்தரங்க அரங்கேற்றமானது வெறுமனே சிறுவர்களால் மாத்திரம் முன்னெடுக்காமல் சமூக ஒன்றினைவின் மூலம் சமுதாய அரங்காக சமூகம் தழுவியதாக மழைப்பழம் சிறுவர் கூத்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.எவ்வாறு ஒரு பாரம்பரிய கூத்து ஆற்றப்படுமோ அதே போன்றுதான் சிறுவர் கூத்தரங்கும் காணப்படுகின்றது. ஊரவர்கள், பெரியவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து இயங்கி முன்னெடுத்தனர் என்பதனை அரங்கேற்ற விழாவில் காணமுடிந்தது.

அத்துடன் அண்ணாவியாரின் பங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கியது.சிறுவர்களின் ஆற்றல், திறன், ஆளுமைகளுக்கு அமைவாக சிறுவர்களுடன் இணைந்து செயற்பட்டனர். அதாவது அண்ணாவியாரின் மத்தளப் பிரயோகம் என்பது சிறுவர் ஆடல்களுக்கு ஏற்ற வகையிலும்,அவர்களது பாடும் திறன்களுக்கு ஏற்பவும் மத்தளத்தை வாசித்தனை கூத்து ஆற்றுகைக்கு மேலும் வலு சேர்த்தமையை கண்டுகொள்ளமுடிகின்றது.
   
அரங்கேற்ற நிகழ்விற்கு களரி அமைப்பதற்கான சாரிகளை அனைத்து சிறுவர்களும் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வந்தனர். இது சிறுவர் கூத்துப் பற்றி புரிதல்களையும் சாறி எதற்கு பயன்படப்போகின்றது போன்ற கேள்விகளையும் அவர்களுக்குள்எழுப்பியிருக்கும். அவ்வாறான கேள்விகள் மூலமாக கூத்துப் பற்றிய சிந்தனைகள் களரி அமைப்பு பற்றிய சிந்தனைகள் உருவாக்கியிருக்கும்.

மேலும் ஆய்வாளர் வெறுமனே ஆய்வாளராக இருக்காமல் பங்குகொள் செயற்பாட்டாளராக ஈடுபட்டமையானது ஆக்கபூர்வமான ஆய்வுச் செயற்பாட்டிற்கு வழியேற்படுத்தியிருந்தது. இவர் சிறுவர் கூத்தரங்கில் அரக்கன் வேடத்திற்கு ஆடியமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளரும் சிறுவர்களும் இணைந்து ஆற்றுகையில் பங்குபற்றிமையானது சிறுவர்களுக்கும் ஆய்வாளருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளை வலுப்படுத்துவதாகவும் அரங்கேற்ற நிகழ்வு அமைந்தது.

எனவே இவ்வாறான பல சிறப்பம்சங்களைத் தாங்கி சிறுவர் கூத்தான மழைப்பழம் அரங்கேற்றப்பட்டதோடு சிறுவர்கள் பொது வெளியில் கொண்டாடி மகிழ்ந்து கற்கின்ற விழாவாகவும் அமைந்தது. இவ்வாறான நிகழ்வுகள் அனைத்து இடங்களிலும் பரவலாக நடைமுறைப்படத்தப்பட வேண்டும் என்பதும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர் செயற்பாடாக இடம்பெறுமாக இருந்தால் ஆக்கபூர்வமான இளந்தலைமுறையின் உருவாக்கதிற்கு வழிவகுக்கும என்பதும் முக்கியமாகும். இச்செயற்பாடுகள் இன்றைய காலத் தேவையும் ஆகும்.