வேகமாக ஒளிப்பிளம்பாக வந்த வேல் பாய்ந்த வேம்பு மரத்தில் கசிந்தது இரத்தம். அந்த இடத்தில் அமைந்ததே இன்றைய பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்.;


                                  ரவிப்ரியா                
எழில் கொஞ்சும் மட்டுமாநகரின் தென் எல்லைக் கிராமமாகவும், இந்து, மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் நிறைந்து காணப்படும், புண்ணிய பூமியான, இயற்கை பசுமைமிக்க பழம் பெரும் கிராமமான பெரியகல்லாற்றில், 1957 காலப் பகுதியில் அமையப் பெற்றதுதான் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்.




சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆலயம் புதுப் பொலிவுடன் புனருத்தாரணம் செய்யப்பட்ட, மேற்படி ஆலயம் எதிர்வரும் 29ந் திகதி திங்கட்கிழமை நவகுண்ட பக்ஷ புனராவர்த்தன கும்பபுரோக்ஷண அஸ்டபந்தன உத்தமயாக பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நடைபெறும். (27) சனிக்கிழமை ஆரம்பமான பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு ஞாயிறு வரை நடைபெற்றது..

60ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம், நீரோடையை அண்மித்து அமையப் பெற்றிருக்கின்றது. முன்பு இப்பிரதேசம் அடர்ந்த காடாக காணப்பட்டது. இயற்கை கடன் கழிப்பதற்காகவே இப் பிரதேசம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. காட்டுப் பிரதேசம் என்பதால் குழுவாகவே மக்கள் அப்பகுதிக்குச் செல்வர்.
அவ்வாறு அவர்கள் ஒருநாள் சென்றபோது, ஓம் சாந்தி என்ற ஒலி ஓங்கி ஒலிப்பதைக் கேட்டு ஒலி வந்த திசையை நோக்கி பார்வையைச் செலுத்தினர். வேம்பு மரமொன்றில் கீழ் வயோதிபர் ஒருவர் அமர்ந்திருப்பதை அவதானித்தனர். அவர் தியானத்தில்; இருந்தார். அவரை அவர்கள் சூழந்;து கொண்ட போது கண்விழித்த அவர் முன்னால் நின்ற சிலருக்கு சித்தர் போல் விபூதி. குங்குமம். கற்கண்டு என்பன வழங்கினார். செய்தி பரவவே மூன்று நாட்களாக அவரை மக்கள் சூழ்ந்திருக்க அவரும் ஒருசிலருக்கு மட்டும் அவற்றை வழங்கி வந்தார். அவர் கதிர்காமம் செல்ல இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.

அன்று கதிர்காமத் தீர்த்தோற்சவ தினம். அன்றுதான் அந்த அற்புதம் நடைபெற்றது. தென் திசையில் இருந்து பாரிய ஒளிக் கீற்று காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக வந்ததை கணப்பொழுதில் மக்கள் கண்ணுற்றனர். அந்த ஒளிப் பிழம்பு  ஒன்று அந்த வயோதிபர் இருந்த இடத்தில் வந்து வீழ்ந்தது. மக்கள் மெய்சிலி;ர்த்து நின்றனர். வயோதிபருக்கு என்ன நடந்ததோ தெரியாதென பதறினர். ஆனால் அந்த இடத்தில் வயோதிபர் இல்லாதததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர் அமர்ந்திருந்த வேம்பு மரத்தில் ஒரு சிறு வேல் பாய்திருப்பதைக் கண்டு திகைத்து நின்றனர். அதுமட்டமன்றி வேல் பாய்ந்திருந்த இடத்தில் இருந்து இரத்தம் கசிவதைக் கண்டு அதிசயித்து அனைவருமே அரோகரா கோஷத்தால் பிரதேசத்தை அதிர வைத்தனர். விடயம் எங்கும் பரவ அனைவரும் ஒன்று கூடி ஓலைக் குடிசை அமைத்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்து வந்தனர். பின்னர் செவ்வாய்க் கிழமைகளிலும் பூஜை தொடர்ந்தது.
பின்னர் தனவந்தர்களின் நிதியுதவியுடன் தென் திசை நோக்கி (ஒளிப் பிழம்பு வந்த திசை நோக்கியவாறு) ஒரு மண்டபம் அமைத்து  1957ம் ஆண்டு ஆனிமாதம் 15ந் திகதி, ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ வேதாரணியம் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். ஸ்ரீசிவசுப்பிரமணியர் பக்தர்களின் மீது அருளை அள்ளிச் சொரிய, பரிபாலன மூர்த்திகள், நவக்கிரகங்கள், கொடிதம்பம் என பக்தர்கள் ஆலய விஸ்தரிப்பிற்கு, முழுமையான ஆலயமாக அமைய நிதியைச் சொரிந்தனர். 1969ல் கும்பாபிஷேகம் அதி சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பாக பூசைகள் நடைபெற்று வரும் நிலையில், கிழக்கில் 1978.01.28 வீசிய சூறாவளியினால் பாரிய  சேதமடைந்தது. எனினும் விக்கிரகங்கள் சேதமடையாத அற்புதம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
பின்னர் மக்களின் பங்களிப்புடன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, 1987ல் நவாலி சிவஸ்ரீ விஸ்வநாதக் குருக்களால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் 07.07.1999ல் கும்பாபிஷேகம் குரும்பசிட்டி சிவஸ்ரீ மாணிக்கவாசக குருக்களால் செய்து வைக்கப்பட்டது. 2004 மார்கழி 26ல் சுனாமியினால் ஆலயம் பாரிய பாதிப்பிற்குள்ளானது. எனினும் விக்கிரகங்கள் பாதிக்கப்படவில்லை.

இதற்குப் பின்னர் 2005 மே மாதத்தில், பிராயச்சித்த பிரதிஸ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயம் முற்றாகப் புனரமைக்கப்பட்டு 20.05.2017 மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.
கிழக்கில் ஆலயங்களில் பொதுவாக குடி முறையே பின்பற்றப்பட்ட வருகின்றது. எனினும் அதற்குப் பதிலாக இவ்வாலயத்தில் குழு முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. வருடாந்த மஹோற்சவத்தின்போது, ஒவ்வொரு வருடமும் அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பின் மூலமே 8 குழுக்களுக்குமான பூசை அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்த ஒழுங்கிலேயே திருவிழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர் ஒருவர் இருந்து செயற்படுத்துவார். எல்லா குழுக்களிலும் சமநிலை அங்கத்தவர்கள் இருப்பார்கள். ஏற்றத்தாழ்வற்ற குழுக்களாக இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இங்கு ஜனநாயகம் என்பது முன்னிலைப்படுத்தி ஏகபோகம் என்பது இல்லாதாக்கப்பட்டிருப்பது ஆலயத்திற்கரிய உயர் பண்பாகக் காணப்படுகின்றது.

தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம்,ஆனி உத்தர திருவிழா, ஆடி மஹோற்சவம், ஆவணி ஓணப்பூசை, புரட்டாதி சனீஸ்வரர் பூசை. கந்த சஷ;டி விரதம். கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை என இவ்வாலயத்தில் விசேட பூசைகள் அனைத்தும் வருடாந்தம் நடைபெற்றுவருகின்றது..
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் அலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு வெள்ளியன்று ஆலயத்தின் தலைவர் எஸ.பேரின்பராஜா தலைமையிலான நிர்வாகிகள், கும்பாபிஷேக பிரதம குரு பிரதிஸ்டா சக்கரவர்த்தி, பிரதிஸ்டா சிரோன் மணி. கிரியாமணி, பிரம்மஸ்ரீ சுந்தரசெந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையிலா குருமாரை ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகா ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையைத் தொடர்ந்து, சம்பிரதாய பூர்வமாக வரவேற்று  சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர்.
சனியன்று கிரியைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ சிவசுப்பிரமணியர்                 ஆலயத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வை ஆலய தலைவர் எஸ்.பேரின்பராஜா சனியன்று ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு இரு தினங்களும் பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தினா.;