ராஜபக்சக்களின் குடியுரிமையை குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்



பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது, இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது, பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தீர்ப்பினை கொண்டு ஒரு தரப்பினர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்து செய்யும் யோசனையை கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன், அந்த கீழ்த்தரமான செயலுக்கு துணை செல்லமாட்டேன், ஏனெனில் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.

அதற்குப் பதில் பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்.