மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


மக்களை அசௌகரியங்களுக்குள்ளாகும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டங்களை வைத்து சுயலாப அரசியல் செய்யும் அரசியல் நிலைப்பாடுகளை தான் ஒருபோதும் விரும்பியதில்லை எனவும் தெரிவித்த அவர் தனியார் போக்குவரத்து சேவையினரின் இவ்வாறான செயற்பாடுகள் இனியொருபோதும் ஏற்படாதிருக்கும் வகையில் இருப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்

வடமாகாணம் தழுவிய ரீதியில் தனியார் போக்குவரத்து சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தீர்வு காண்பதற்கான கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற வேளையே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்;
தனியார் போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் தமது கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையிலான போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதில் தவறுகள் ஏதும் இருக்கப்போவதில்லை. அது அவர்களது அடிப்படை உரிமையும் கூட. ஆனால் மக்களை அசௌகரியங்களுக்குள்ளாகும் வகையில் அரச போக்குவரத்து சேவையை முடக்கி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய அவர்களது செயலை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முற்றிலும் வெறுக்கத்தக்க செயல். இதேவேளை இவ்வாறான மக்களை அசௌகரியங்களுக்குள்ளாகும் செயற்பாடுகள் இனியொருபோதும் ஏற்படாதிருக்கும் வகையில் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த பிரச்சினைக்கான தீர்வைக்காண ஆளுநர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஒருவார காலப்பகுதியில் இருதரப்பு நியாயங்களும் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் இறுதி முடிவை ஆளுநர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.