சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார் !



கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் பாடசாலை சூழலில் பதற்றமான நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிற்கு பிரிதொரு பாடசாலையிலிருந்து மாணவர்கள் சிலர் வருகைதந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு பாடசாலை மாணவ குழுக்களுக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை ஆரம்பித்த நாளிலிருந்து இருதரப்பினருக்குமிடையிலும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் மாணவரொருவரின் தாயொருவர் பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரைக் கைது செய்து கடுமையாக எச்சரித்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.