தாயுடன் வாக்குவாதம் : சிறுமி உயிர்மாய்ப்பு !


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது.

இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இன்றையதினம் (14) கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதான சிறுமி ஒருவரும் உயிர்மாய்த்த சம்பவமும், கடந்த 12ஆம் திகதி மூதூர் - பாரதிபுரத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.