.jpg)
(செங்கலடி நிருபர் சுபஜன்)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
கைப்பேசியை (Mobile Phone) பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 15 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
குற்றத்தை மறைக்க முயற்சி:
இதனையடுத்து, பயமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார்.
எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர முதற்கட்ட விசாரணைகளின் போது சிறுவனின் இந்தச் செயல் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.








.jpg)

.jpg)

