தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இணையதளம் அங்குரார்ப்பணம் !


தொழுநோய் தொடர்பில் பொது மக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் அலையன்ஸ் டெவலப்மெண்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் கூட்டு முயற்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளம் செவ்வாய்க்கிழமை (14) உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

எக்ட்டூப்ரேவேன்ட் (ACT2Prevent) என்ற பெயரில் இந்த இணையத்தளம் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் முன்னால் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம, அலையன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் நிறுவன பணிப்பாளர் ரகு பாலசந்திரன், தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிரூபா பல்லேவத்த, தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரனவீர, விசேட வைத்திய நிபுணர் திலினி விஜேசேகர, விசேட வைத்திய நிபுணர் இந்திரா காஹவிட்ட ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்

இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (14) தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் அலையன்ஸ் டெவலெப்மென்ட் ட்ரஸ் நிறுவனத்தினரால் புதிய தொழுநோய் பிரசார இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. எக்ட்டூப்ரேவேன்ட் (ACT2Prevent) என்ற இணையதளம் வாயிலாகத் தொழுநோய் தொடர்பான விடயங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழுநோயாளர்கள் சமூகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆகையால் தொழுநோயார்களுக்கான சமூக அங்கீராத்தை பெற்றுத்தரும் மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிகிச்சைகள் தொடர்பில் விரிவான தகவல்கள் பகிரப்பட உள்ளது. தொழுநோயாளர்களின் குறுகிய மனப்பாங்கை இல்லாதொழித்து உரிய சிகிச்சைகளைப் பெற உதவும் வகையில் குறித்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.