மூன்று அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு : பொலிசார் விசாரணை !


மூன்று பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 03 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று குறித்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மார்ஸ்டெல்லா பாடசாலைக்கு முன்பாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக 119க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இறந்தவர் சுமார் 65 வயதுடையவர் என்றும், இறுதியாக பனியன் மற்றும்நீல நிற சதுரங்கள் கொண்ட சாரம் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறிகுரச தேவாலயத்திற்கு பின்னால் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக 119 இன் கீழ் தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் முதுகு மற்றும் தோள்களில் பச்சை குத்திய அடையாளங்கள் இருந்ததாகவும், இறுதியாக நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கொன் விகாரையினுள் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் 60 முதல் 65 வயதுடையவர் எனவும் 05 அடி 01 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிவப்பு நிற மேலாடையும், நீலம் மற்றும் பிரவுன் நிற பாவாடையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.