கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட இளைஞன் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 11 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரான இளைஞனால் பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்டதாக கூறப்படும் 5 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.