இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் ராமேஸ்வரம் கடற்கரையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 இலட்சம் (இந்திய மதிப்பில் 10 இலட்சம்) பெறுமதியான 50 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழக பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்ட தனிப்பிரிவு பொலிஸார் காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து பொலிஸார் அந்த நபரை மடக்கி பிடித்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த போது காரில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன், அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் 34 இலட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.