இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று வீதியை கடக்க முயன்ற நால்வர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோரலஇம பிரதேசத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றுக்கு சென்ற சகோதரிகள் இருவர் தங்களது இரண்டு மகள்களுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வீதியை கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நால்வரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரிகள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 மற்றும் 50 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு மகள்களும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 28 வயதுடைய கார் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.