இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதம் வேறு தினத்திற்கு மாற்றம் !



இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதியில் இடம்பெறாதெனவும் மாறாக வேறு ஒரு திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

அதற்கு 24 ஆம் திகதி இடம்பெறவிருந்த இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்குப் பதிலாக, புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அதற்கமைய, அன்றைய தினத்தில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை மாலை 5.30 மணி வரை நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மற்றுமொரு பாராளுமன்ற அமர்வு தினமொன்றில் இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.