தேசபந்து தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம் !


2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அன்று காலி முகத்திடலில் நடந்த "கோட்டா கோ கம" போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் அப்போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிமாடு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றத்தால் இன்று (22) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிக்க அனுமதி அளித்து, ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, வழக்கில் பிரதிவாதிகளின் பட்டியல் திருத்தப்படவில்லை என்று தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.

அதன் பின்னர், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சட்டமா அதிபரால் இரகசிய உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல முக்கிய ஆவணங்களை தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஏதேனும் விசாரணை தொடர்பாக பொலிஸாரின் அறிவுறுத்தல்களைக் கோரும்போது தேவையான அறிவுறுத்தல்களை வழங்க சட்டமா அதிபருக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தேசபந்து தென்னகோன் குறித்த சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுத்தமை, கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி, என்றும் அவர் கூறினார்.

இந்த தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் சட்டமா அதிபர் முன்வைத்த எந்தவொரு சமர்ப்பணங்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், மனுதாரர் கோராத நிவாரணத்தை கூட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ளதாகவும் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த தீர்மானம் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்றும் கூறினார்.

பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இல்லை என்றும், விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் சந்தேக நபரை பெயரிடும் முடிவை பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், தேசபந்து தென்னகோனை குறித்த சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதம் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி வலியுறுத்தினார்.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது.

அத்துடன் மனுவில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

குறித்த சம்பவத்தில் சந்தேகநபராக தம்மை பெயரிடுமாறு சட்டமா அதிபரால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி குற்றப்புலானய்வு திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பு வழங்குமாறு கோரி தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான நீதிபதிகள் அமர்வால் குறித்த கடிதத்தை வலுவற்றதாக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்தத் தீர்ப்பை இரத்து செய்யக் கோரியும், சட்டமா அதிபர் இந்த மேன்முறையீட்டை உய​ர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.