ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது





18 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கனடா நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஆவார்.

சந்தேக நபரான வெளிநாட்டு பெண் கனடாவிலிருந்து கத்தாரின் தோஹா நகரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து இன்றைய தினம் அதிகாலை 02.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெளிநாட்டு பெண் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 18 கிலோ 123 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.