இலங்கை மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அம்பியூலன்ஸ்கள் இன்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நாட்டில் மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றின் பெறுமதி ரூ. 25.7 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இந்தப் புதிய அம்பியூலன்ஸ்களில், நோயாளியை வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது பல்வேறு சிகிச்சைகளை வழங்கும் வசதிகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன.
இந்த 20 அதிநவீன அம்பியூலன்ஸ் வண்டிகள் எம்பிலிப்பிட்டிய, நாவலப்பிட்டிய, மாத்தளை, நீர்கொழும்பு, திருகோணமலை, நுவரெலியா, சிலாபம், மொனராகலை, தம்புள்ளை, ஹொரணை ஆகிய 10 மாவட்ட பொது வைத்தியசாலைகள், பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, அநுராதபுரம் ஆகிய 4 போதனா வைத்தியசாலைகள், பொத்துவில், கந்தளாய், அக்கரைப்பற்று, தெஹியத்தகண்டிய ஆகிய 4 ஆதார வைத்தியசாலைகள், அம்பாறை பொது வைத்தியசாலை மற்றும் சிகிரியா வைத்தியசாலை ஆகிய இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வைத்தியசாலை அமைப்புக்குத் தேவையான அம்பியூலன்ஸ் வண்டிகள் வரும் காலங்களில் கட்டம் கட்டமாக வழங்கப்படும், இதற்காக மத்திய அரசிடமிருந்தும், சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட விசேட திட்டங்களிடமிருந்தும், வெளிநாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வைத்தியசாலைகளுக்கு தேவையான பௌதீக வளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாமிக கமகே, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் தினிபிரிய ஹேரத், போக்குவரத்து பணிப்பாளர் நிலங்க தில்ஹான் சோமபால, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கையில் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.