இஸ்ரேலில் தாதியர் வேலைக்கான ஆட்சேர்ப்பு மோசடி !


இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்தின் (PIBA) அதிகாரிகளுடன் நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தின.

முதலாவது, தாதியர் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பணத்திற்காக அழுத்தம் கொடுக்கும், நிலம் அல்லது சொத்தை உத்தரவாதமாக கோரும் மற்றும் பிற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இடைத்தரகர்களுக்கு எதிரான முறைப்பாடுகள்.

குற்றப் புலனாய்வுத் துறை (CID) மூலம் அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆட்சேர்ப்பு செயல்முறையை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதன்போது பிரதி அமைச்சர் கூறினார்.

இரண்டாவதாக இஸ்ரேலின் ஹோட்டல் துறையில் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இஸ்ரேல் தரப்பிலிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்ததாகவும், விரைவான தீர்வுகளைக் கண்டறிவதில் இரு நாடுகளும் பாடுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.