சனத்தொகை தரவுகளின்படி இலங்கையில் ஒவ்வொரு 100 பெண்களுக்கு 93 ஆண்கள்


மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகளின்படி, இலங்கையின் 'பாலின விகிதம்' 93.3 ஆகப் பதிவாகியுள்ளது. 

பாலின விகிதம் என்பது, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் உள்ள ஆண்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு முக்கியமான சனத்தொகை குறியீடாகும்.

இது சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும், நீண்ட கால சனத்தொகை நிலைத்தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாகும்.

அதன்படி, பாலின விகிதம் 100 இற்கு அதிகமாக இருக்கும்போது ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதையும், 100 இற்குக் குறைவாக இருக்கும்போது பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதையும் குறிக்கிறது.

2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் 93.8 ஆகப் பதிவான பாலின விகிதம், 2024 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் 93.3 ஆக உள்ளது.

இதன் மூலம், 2012 முதல் 2024 வரையான சனத்தொகைக் கணக்கெடுப்பு காலத்தில் 0.5 சதவீத அலகுகளால் குறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பில் வயதுப் பிரிவுகளின்படி பாலின விகிதத்தைக் கருத்தில் கொண்டால், 0 முதல் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளின் பாலின விகிதம் 100 ஐ விட அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது.

இருந்த போதிலும், 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதுப் பிரிவுகளிலும், அதாவது வயதாகும் போது, பாலின விகிதம் படிப்படியாகக் குறைவதைக் காட்டுகிறது.

குறிப்பாக, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவினர் குறைந்தபட்ச பாலின விகிதமான 69.8 ஐக் காட்டுகின்றனர்.

இந்தச் சனத்தொகைக் கணக்கெடுப்பில் மொனராகலை மாவட்டம் அதிகபட்ச பாலின விகிதத்தை, அதாவது 97.9 ஆகப் பதிவு செய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மன்னார் மாவட்டம் 97.3 என்ற அதிக விகிதத்தை காட்டுகிறது.

அதேவேளையில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே குறைந்த பாலின விகிதம் பதிவாகியுள்ளது. அங்கு 88.0 விகிதத்தை காட்டுக்கிறது.