நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட்டத்தில் இல்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் 2028ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் 5 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறில்லை எனில் மீண்டும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, நாட்டில் எல்ல மட்டத்திலும் எல்லா வகையிலும் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும். 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும். நமது நாட்டிற்கு கிட்டும் அந்நிய செலவாணி உயர் மட்டத்திலிருக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும். நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட்டத்தில் இல்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வறுமை அதிகரித்து, மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது.
நுகர்வு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேமிப்பு என்பனவும் குறைந்து வருகின்றன. இவை அனைத்தையும் உயர் மட்டத்தில் பேணி வர, பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களது சொத்துக்களும் உடமைகளும் ஏலம் விடப்படுகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்காக் கொண்டு இந்த ஏலம் நிறுத்தப்பட்டாலும், அவர்களின் கடன்கள் மறுசீரமைக்கப்படவில்லை. முந்தைய அரசாங்கமும் இந்த அரசாங்கமும் வாக்குகளை தமக்கு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு ஏலத்தை இடைநிறுத்தியது.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள், இந்தக் கடன் பொறியில் சிக்கியுள்ள தொழில் உரிமையாளர்களால் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அவர்களின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும். இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டமும், தொலைநோக்கு பார்வையும், சிறந்த குழுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. பொருளாதாரத் திட்டமொன்று இல்லாததால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 2028ஆம் ஆண்டாகும் போது ஆபத்தான சூழ்நிலை ஏற்படக்கூடும். இன்று நாடு வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே கிடைக்கின்றது.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கிட்டாது போகும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இந்த இலக்குகளை அடைந்து கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில், நாடு தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும். 2022 இல் நாடு வீழ்ந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலைக்கு மீண்டும் விழுவதை நான் விரும்பவில்லை.
இந்த சூழ்நிலையில் நாம் சிக்காமல் இருக்க, பொருளாதாரம் வேகமாக முன்னேற்றம் காண வேண்டும். ஏற்றுமதிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் திட்டவட்டமான தேசிய பொருளாதார திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறானதொரு வேலைத்திட்டம் இல்லை. செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை, இதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி வீதம், அந்நிய நேரடி முதலீடு குறித்து நான் அண்மையில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன்.
ஆனால் இந்த அரசாங்கத்திடமிருந்து இன்னும் எந்த பதிலும் இல்லை. 2028 கடன் திருப்பிச் செலுத்துதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் கால அவகாசம் கோருகிறது. அவ்வாறெனில் இந்தப் பிரச்சினைக்கான பதில் அவர்களிடம் இல்லை. எனவே சரியான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இருந்தால், இதற்கு பதிலளிக்க நேரம் கோர வேண்டிய தேவையில்லை என்றார்.