போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது !


இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது.

500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

45.400 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் சைலோசைபின் (psilocybin) அல்லது மேஜிக் மஷ்ரூம்ஸ் (magic mushrooms) எனப்படும் 6 கிலோகிராம் மஷ்ரூம்ஸ் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் (Kempegowda International Airport) கடந்த ஒக்டோபர் 9 அன்று கொழும்பிலிருந்து வந்த இரண்டு நபர்களை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கைது செய்துள்ளது.

இதன்போது, அவர்களின் பயணச் சுமைகளில் (luggage) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல விவரங்கள் தெரியவந்தன.

அதன்படி, இந்தக் கடத்தல் ஒரு இலங்கையரால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வேறொரு விமானத்தில் வந்தபோது இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் மூன்று நபர்கள் (இலங்கையர் உட்பட) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.