அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ! கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை சேகரிக்கும் மக்கள்

 




நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை   பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும்  சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மின்பிறப்பாக்கி பாவனை என கூறி பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி  தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்கி வருகின்றனர்.

போதுமான எரிபொருள் கையிருப்பு இருக்கின்ற போதிலும் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தின் காரணமாக இச் செயற்பாடு தோன்றுவதனால்  வாகனங்களின் தாங்கிகளை தவிர பிற கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணேய் ஆகியவற்றுக்கு வரிசை நிலவி வருகின்றது.இங்குள்ள எரிபொருள் நிலையங்களம் சுழற்சி முறையில் எரிபொருளை விநியோகித்து வருகின்றன. மேலும் நாட்டில் எரிபொருள்  பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று உரிய தரப்பினர் அறிவித்துள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

சில இடங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருள  வழங்கப்பட்டு வருகின்றது.ஏனைய சில எரிபொருள் நிலையங்களில்  இல்லை என்ற வாசகத்தால் மக்கள்  ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் மின்சாரம் இன்மை காரணமாக கடைகளில் மின்பிறப்பாக்கி ஊடாக மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றது.இதில் ஒரு மணித்தியாலத்திற்கு 100 ரூபா வீதம் தொலைபேசிகள் சார்ஜ் செய்து கொடுக்கப்படும் அவல நிலையும் தொடர்ந்து வருகின்றது.

அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை, அக்கரைப்பற்று , திருக்கோவில்  போன்ற பிரதேசங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் இன்மை காரணமாக இந்நிலைமை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.