கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 03 சந்தேக நபர்கள் கைது !



லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, லுணுகம்வெஹெர - உனத்துவேவ பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3,983 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனமல்வில, தேவ்ரம்வெஹெர பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய - புத்கந்த பகுதியில், கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 7,130 கஞ்சா செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 43 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், எம்பிலிபிட்டிய, தோரகொலயாய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.