மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்



இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் பயணித்து இன்று பிற்பகல் வேளையில் பொத்துவிலுக்கும், திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பாதிப்பு காரணமாக வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழை மற்றும் காற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 - 75 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.