மாமியை வெட்டிப் ப டு கொ லை செய்த அரச உத்தியோகத்தர் கைது



யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து, மனைவியை தாக்கியுள்ளார்.

அவ்வேளை மனைவியை கத்தியால் குத்த முற்பட்டபோது, மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்திவிட்டு, அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு, வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய்வீட்டிற்கே சென்றிருப்பார் என்ற எண்ணி, மனைவியின் தாய்வீட்டிற்கு கணவன் சென்றுள்ளார்.

அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் வாக்குவாதம் செய்து, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே சென்று, அப்பகுதியில் மனைவி, பிள்ளைகளை தேடியுள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து, அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாளால் தாக்கியுள்ளார்.

அவ்வேளை, அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.

அதனையடுத்து, அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான, கொலை செய்யப்பட்டவரின் மருமகனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.