பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குவதற்கும், அவரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது. அதன் ஒரு அங்கமாகவே பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடற்றொழிலாளர்கள் பற்றி அதிக கவனம் செலுத்துவதாகவும், அவர்களின் நலன் பற்றி ஆராய்வதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் நேற்று (நேற்று முன்தினம் ) எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வித நிவாரண கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
பல வாக்குறுதிகளை வழங்கிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்கும் எவ்வித திட்டங்களும் அமுல்படுத்தப்படவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து புதிய பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.இது திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடாகும். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குவதற்கும், அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் தீட்டப்பட்ட சூழ்ச்சியின் வடிவமாகவே இந்த பாடப்புத்தக சர்ச்சை காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தாம் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மாத சம்பளம் பெலவத்த காரியாலய நிதியத்துக்கு செல்கிறது.
ஆகவே கட்சியின் உறுப்புரிமையை பெறாமலே தேசிய மக்கள் சக்தியினர் ஜே.பி.வி.யின் உறுப்பினர்களாகியுள்ளார்கள். பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சாதாரணமானவரல்ல என்றார்.




.jpg)




.jpg)



.jpeg)