இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் செல்லுபடியாகும் உரிமம் இன்றி ரோமானியாவில் வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி சுமார் 16 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர், பல மாதங்கள் கழித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்ததன்படி, முன்பு ருமேனியாவில் பணியாற்றியிருந்த குறித்த சந்தேக நபர், அங்குள்ள தனது தொடர்புகளை பயன்படுத்தி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நபர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதுடன், அதை நிறைவேற்றத் தவறியதாக கூறி 15 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தபோதிலும், சந்தேக நபர் அதிகாரிகளைத் தவிர்த்து பல இடங்களுக்கு மாறிவிட்டார் என்றும் அதில் பிலியந்தலை, வெல்லம்பிட்டிய, கொலொன்னாவ, கஹதுடுவ ஆகிய பல இடங்களில் தலைமறைவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையாளர்கள் கடைசியில் வேறொரு நபரை பயன்படுத்தி சந்தேக நபருடன் தொடர்பு கொண்டு, கொலொன்னாவையில் உள்ள ஒரு சட்டத்தரணியின் வீட்டில் தொழில் சார் ஒப்பந்தங்களை கையொப்பமிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே குறித்த பெண்ணை கைது செய்தனர்.
அப்பெண்ணை கொழும்பு மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை மார்ச் 3ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான தொடர் விசாரணையின் பின்னர், அப்பெண்ணுக்கு குறித்த மோசடியில் உதவி செய்த மேலும் நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணை அதிகாரிகள், இந்த மோசடியில் மேலும் பல நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.













