அரசாங்கத்தின் செல்வாக்கு 25% ஆக வீழ்ச்சி ; முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – வைத்தியர் சமல் சஞ்சீவ !


அரசாங்கத்தின் மீதான மக்கள் பிரசாதம் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், தற்போதைய யதார்த்தம் அதற்கு நேர்மாறானது எனவும் தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (19) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் புகழ் இவ்வளவு உயர்வாக இருந்தால், கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.

தற்போது மாகாண சபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், அந்த அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளின் கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

பல்வேறு தொழில் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 60 வீதமாக இருந்த அரசாங்கத்தின் ஆதரவு, தற்போது மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் வேளையில் 42 வீதமாகவும், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் மத்தியில் 25 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, சிங்கள பௌத்த சமூகத்தினர் மத்தியில் இந்த ஆதரவு 35 வீதம் வரை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இவ்வாறான பின்னடைவை மறைக்கவே 'வெரிட்டே ரிசர்ச்' போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

சுகாதாரத் துறையின் அவலநிலை குறித்துப் பேசிய வைத்தியர் சமல் சஞ்சீவ, புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஏனைய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சுமார் 60 வீதமான மருந்துகளை வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாகவும், சி.டி ஸ்கேன் (CT scan) மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்காக 40,000 ரூபா வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இவ்வாறான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களின் நிதியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு எதிராக 'சேறு பூசும்' விளம்பரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் சாடினார்.

அரசாங்கத்தின் இவ்வாறான தரம் தாழ்ந்த அரசியல் செயற்பாடுகளைக் கண்டித்த அவர், நாட்டின் தொழில் வல்லுநர்களை அச்சுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழலை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி வருவதாகக் கூறினார். கல்விமான்கள் மற்றும் அறிவுஜீவிகள் நாட்டில் இருந்தால் அரசாங்கத்தின் தவறுகளைக் கேள்வி கேட்பார்கள் என்பதால், இலங்கையை ஒரு 'அறிவுப் பாலைவனமாக' மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னிற்கும் எனத் தெரிவித்த அவர், தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் வலியுறுத்தினார்.