அங்கீகரிக்கப்பட்ட நேர்மையும் சிறந்த சுயாதீனமும் கொண்ட ஒரு கல்விமானாகவுள்ள பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் சாதனைகள் அவமதிப்பிற்குரியதாக அன்றி, தேசிய பெருமையின் அடையாளங்களாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்குள் அவர் உள்வாங்கப்படுவது கடும் கவலையைத் தோற்றுவிப்பதாக பெண் உரிமைகள் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய சுயாதீன கல்விமான்களது நற்பெயருக்குக் களம் விளைவிக்காத வகையில் விசாரணை நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்யுமாறும், பேராசிரியர் விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கௌரவம் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசமான்ய ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி சுபாங்கி ஹேரத், கலாநிதி ரேணுகா பத்திரண, ஜி.யு.எஸ். குணவர்தன, தீகு முனசிங்க, பெண் செயற்பாட்டாளர் புஷ்பா ரம்லினி ரத்நாயக்க, சரோஜா சிவச்சந்திரன், ஷிரீன் சரூர், விசாகா தர்மதாச, வித்யா பெரேரா, நிர்மலி விக்கிரமசிங்க, சாவித்திரி ரோகு, ஸ்ரீயானா பெரேரா, உதயங்கனி தழுவத்த, ஜீவனி காரியவசம், குமுதினி சாமுவேல், சரினா ரஹீம், சுஹாரா அஸீஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஏகோபித்த ஆதரவு அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாக அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிகழ்வின் போது, பேராசிரியர் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. பாலின சமத்துவம் குறித்த அவரது விரிவான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கொள்கை ரீதியான பணிகளைப் பாராட்டி, வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அவரை 'முன்னணி இலங்கை பேராசிரியர்' என அங்கீகரித்து கௌரவப் பட்டம் வழங்கியதை நினைவுகூர்வது அவசியமாகும்.
இந்த கௌரவம் அவரது சுயாதீனமான கல்விசார் சாதனைகள் மற்றும் நீண்டகால தொழில்முறை பங்களிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகும். பேராசிரியர் விக்கிரமசிங்க களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றுவதுடன், அங்குள்ள பாலினக் கல்வி மையத்தின் நிறுவகப் பணிப்பாளரும் ஆவார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாலின சமத்துவக் கொள்கை மேம்பாடு, பாலின உணர்திறன் பயிற்சி மற்றும் பெண்கள் தொடர்பான திட்டங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் பெண்ணிய ஆராய்ச்சி நெறிமுறை பற்றி அவர் மேற்கொண்ட கலாநிதிப் பட்ட ஆய்வு, சர்வதேச கல்வித்துறையில் அவரது இடத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரூட்லெட்ஜ் நிறுவனத்தால் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அவரது தொழில்முறை பங்களிப்புகளில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுநலவாய பல்கலைக்கழங்களின் சங்கம் மற்றும் பொதுநலவாய செயலகத்தின் திட்டங்கள் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்புகளில் ஆற்றிய பணிகள் அடங்கும். அவர் ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் சபையிலும் பணியாற்றியுள்ளதுடன், கல்விசார் பதிப்புப் பணிகள், பயிற்சி மற்றும் நிறுவன மேம்பாட்டிற்கும் விரிவாகப் பங்களித்துள்ளார்.
குறிப்பாக, களனிப் பல்கலைக்கழகத்தில் அவர் நிறுவிய பாலினக் கல்வி மையம், இலங்கை பல்கலைக்கழக அமைப்பு முழுவதும் இத்தகைய மையங்களை நிறுவுவதற்கு ஊக்கியாக அமைந்தது. இத்தகைய சாதனைகள் அவமதிப்பிற்குரியதாக அன்றி, தேசிய பெருமையின் அடையாளங்களாக இருக்க வேண்டும். பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க அங்கீகரிக்கப்பட்ட நேர்மையும் சிறந்த சுயாதீனமும் கொண்ட ஒரு கல்விமானாவார்.
பொதுப் பொறுப்புக்கூறல் தொடர்பான எந்தவொரு விசாரணைச் செயல்பாடும் முறையான வெளிப்படைத்தன்மையுடனும் சரியான நடைமுறைகளைப் பின்பற்றியும் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்தச் செயல்முறை முதன்மையாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதியை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்குள் இழுக்கப்படுவது கடும் கவலையைத் தோற்றுவிக்கிறது.
இத்தகைய சுயாதீன கல்விமான்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அல்லது நற்பெயருக்குக் களம் விளைவிக்காத வகையில் விசாரணை நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கல்விச் சுதந்திரம், நிறுவன ரீதியான சுயாட்சி மற்றும் அரசியல் பழிவாங்கல்களில் இருந்து கல்விமான்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத அங்கமாகும்.
நீதியான மற்றும் விகிதாசாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான நடைமுறைகளை உறுதிப்படுத்துமாறும், பேராசிரியர் விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கௌரவம் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்குமாறும் நாங்கள் கோருகிறோம்.













.jpeg)