இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் மின் உற்பத்தி நிலையத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த மாதம் (மார்ச்) முதலாம் திகதி முதல் முழுமையாகப் புதிய நிலக்கரியையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கலாநிதி விதுர ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"தற்போது 10 - 16 மணித்தியாலங்கள் போன்ற ஒரு சிறு காலப்பகுதிக்கு மாத்திரமே தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் முந்தைய விநியோகஸ்தரால் கொண்டுவரப்பட்ட நிலக்கரி இன்னும் மின் உற்பத்தி நிலையத்தில் கையிருப்பில் உள்ளது. ஆனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய தரப்பினரிடம் கேட்டால், மார்ச் 1 ஆம் திகதிக்குப் பிறகு அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஏனெனில் பழைய நிலக்கரி தீர்ந்துவிடும் என்பதால், முழுமையாகப் புதிய நிலக்கரிக்கு மாற வேண்டியிருக்கும்.
இந்தத் தரமற்ற நிலக்கரியை 24 மணித்தியாலங்களும் பயன்படுத்தும்போது இயந்திரங்களுக்கு ஏற்படும் பாதிப்பே இங்குள்ள மிகப்பெரிய சிக்கலாகும். அவ்வாறு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்கள் சேதமடைந்தால், மழை இல்லாத இந்தக் காலத்தில் நாம் என்ன செய்வோம்? அப்படி நடந்தால் இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பிற்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தயவுசெய்து பொறியியலாளர்களைச் சந்தித்துச் சரியான முடிவை எடுங்கள். இதனைச் சரியாக முகாமைத்துவம் செய்யாவிட்டால், முழு நாட்டின் மின்சாரத் துறையின் பாதுகாப்பு இல்லாமல் போய், மின்சாரக் கட்டணத்தைப் பெருமளவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.













