சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்று கைவரிசை : சொக்லேட் திருடிய சிறுமிகள் !


களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 40,000 ரூபாவாகும் என களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த பின்னர் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபி, சொக்லேட், லொலிபொப், சூயிங்கம் மற்றும் பெப்பர்மிண்ட் தொகையொன்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகள் சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடி, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் சிற்றுண்டிச்சாலையின் முன் கண்ணாடியைப் பொல்லால் அடித்து உடைத்து, திருடிய பொருட்களைப் பொலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று மறைத்து வைத்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.