மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி


மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியில் நவாஸ் பேக்கரிக்கு அருகில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரைச் சேர்ந்த 84 வயதுடைய அலியார் ஜமால்தீன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காலை பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்ட போது, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த எல்ப் ரக வாகனம் மோதியுள்ளதுடன் இதில் குறித்த நபர் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக எல்ப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.