மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட போதிலும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாமை குறித்துக் கவலை வெளியிடப்பட்டது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதே யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைய முக்கிய காரணமாகும். மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், யானைகளின் வருகை மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மகாவலி திட்டத்தை முன்னிறுத்தி இடம்பெறும் பாரிய அளவிலான மண் அகழ்வு காரணமாக, மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தொடர்ச்சியான கனமழை மற்றும் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அறுவடைக்காலத்திலும் நெல்லை உலர வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஈரநெல்லை 5,000 ரூபாய்க்குக்கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முற்பட்டபோது, 2026 பெப்ரவரி 13 ஆம் திகதியுடன் காப்பீட்டுக் காலம் முடிவடைந்ததாகக் கூறி நிவாரணம் மறுக்கப்படுவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் திட்டமிட்ட தாமதங்கள் நிலவுவதாகச் சந்தேகம் வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகளின் பணிகளைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வியும் இதன்போது எழுப்பப்பட்டது.













