நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் குறைந்தபட்ச வருமானமே உத்தியோகபூர்வ வறுமைக் கோடு என அழைக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் 2025 டிசம்பரில் ரூ. 16,658 ஆக இருந்த வறுமைக் கோடு, 2026 ஜனவரியில் ரூ. 16,730 ஆக உயர்ந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தில், வறுமைக் கோடு ரூ. 18,044 ஆகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு மற்றைய மாவட்டங்களை விட அதிக வருமானத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, மொனராகலை மாவட்டத்தில் மிகக் குறைந்த வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த வறுமைக் கோடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













