ஆட்சியைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள்: உண்மைகளை உடைத்தார் அமைச்சர் ஆனந்த விஜேபால


கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன. இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பணம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்குப் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டு தற்போது படிப்படியாக அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்."

"போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன. நாங்கள் இந்தக் கொலைகளை அங்கீகரிக்கவில்லை, அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை 'சிவப்பு அறிவித்தல்' மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது."

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் தற்போது முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.