காவல் குடிசைக்கு ஏறியபோது ஏணி முறிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு !


அநுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பகுதியில் மரம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறும்போது ஏணி முறிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (23) பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏணி திடீரென முறிந்து விழுந்துள்ளது. இதன்போது ஏணியிலிருந்து விழுந்த அவர், பலத்த காயமடைந்த நிலையில் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தானை பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.