அக்குரேகொட இரட்டை கொ .லை - அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம்

அக்குரேகொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட பகுதி, ஒரு உயர் பாதுகாப்பு வலயம் அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதுவொரு தனிப்பட்ட சம்பவம் என்றும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், இத்தாக்குதலில் உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகச் சித்தரிக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இந்தக் கொலைச் சம்பவம் ஒருபோதும் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருதப்படக் கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. எவருடைய கைகளாலும் இன்னொருவர் உயிரிழப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அனைவரின் உயிரையும் பாதுகாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதற்காகப் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

சமூகத்தில் பெருமளவான ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன. கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில்தான் நாம் செயற்பட்டு வருகிறோம். சில இராணுவ முகாம்களிலிருந்து பாதாள உலகக் குழுக்களுக்கு ஆயுதங்கள் சென்றமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் சூழலிலேயே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன. கொலைக் கலாசாரத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மீண்டும் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்தார்.