இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் மருத்துவக் கல்வி


பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்கள் அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த மாணவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது.

மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் லியாகுத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) ஆகியவற்றில் தமது கல்வியைத் தொடரவுள்ளனர்.

மேற்கூறப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களும் இலங்கை மருத்துவ சபையினால் (SLMC) முறையாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், அங்கு பெறப்படும் பட்டங்கள் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றவையாக அமையும்.

தற்போது பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ள மாணவர்களைத் தவிர, ஏற்கனவே 430-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கல்வி பயின்று வருகின்றனர்

இவர்கள் மருத்துவம், பொறியியல், வணிகக் கல்வி, இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்களின்படி, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் பரீட்சைகள் மூலமே இம்மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதே திட்டத்தின் கீழ் மேலும் 100 இலங்கை மாணவர்கள் விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.