குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை (25) காலை கைது செய்யப்பட்ட , அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கி கணக்குகளை விரிவாக ஆய்வு செய்யப் புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு நேற்று காலை 8.10 மணியளவில் சுரேஷ் சலே பணிக்குச் சென்று கொண்டிருந்த போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரைத் தொடர்ந்து சி.ஐ.டி தலைமையகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா? தெரிந்திருந்தும் அவர் அதனை உரிய தரப்பினருக்கு அறிவிக்காமல் மறைத்தாரா? என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் 'சனல்-4' ஆவணப்படத்தில் அசாத் மௌலானா வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரத் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுடன் இணைந்து சதி செய்தாரா என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இத்தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றில் சி.ஐ.டியினர் சமர்ப்பித்த இரகசிய அறிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சுரேஷ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.













